புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு சொத்து வரி விதிப்பதற்காக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி வரி வசூலிப்பாளர் ராஜா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும்களவுமாக பிடிபட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கி அலுவலர் ஒருவர் சிக்கிய சம்பவம், சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகராட்சி 5 வது கோட்டம் மிட்டாப்புதூர் , ஆண்டிச்சி நகர் பகுதியை சேர்ந்த சண்முகன் என்பவருடைய மகன் சாஜு(33). இவர் அதே பகுதியில் புதிதாக மாடி வீடு ஒன்று கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு சொத்து வரி செலுத்துவதற்காக அந்த பகுதியின் மாநகராட்சி வரி வசூலிப்பாளர் (பில் கலெக்டர்) ராஜா-வை அணுகியுள்ளார்.
சொத்து வரியை குறைத்து மதிப்பிடுவதற்காக பில் கலெக்டர் ராஜா, 35 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியாக 30 ஆயிரம் கொடுத்தால் சொத்து வரியை குறைத்து மதிப்பிட்டு தருவதாக சாஜூ-விடம் தெரிவித்துள்ளார். லஞ்சப்பணம் தர மனமில்லாத சாஜூ , இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சாஜு, பில் கலெக்டர் ராஜாவிடம் லஞ்சமாக வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பில் கலெக்டர் ராஜாவை, கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தையும் மீட்டனர். மேலும் அவருடைய இருசக்கர வாகனத்திலும் போலீசார் சோதனையிட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி சமயத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி, வரி வசூலிப்பாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.