ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இளங்கோவன் மகன் ஜெயம் மனோஜன் என்பவரை தேடி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளி நாகேந்திரனின் உறவினர்கள் வீடுகளில் கடந்த ஜனவரி மாதம் வியாசர்பாடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவர்களது வீடுகளில் இருந்து 51 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நாகேந்திரனின் உறவினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நாகேந்திரனின் 2வது மகன் அஜித் ராஜ் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பிரபல வழக்கறிஞரான பட்டாபிராம் இளங்கோவன் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இளங்கோவன் மகன் ஜெயம் மனோஜன் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தனிப்படை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.