வாடகை இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் பயணித்த போது ஓட்டுநர் சிலுமிஷம் செய்ததால் ஓடும் வண்டியிலிருந்து குதித்து தப்பித்த பரபரப்பு வீடியோ.
பெங்களூரு நகரில் கடந்த 21 ஆம் தேதி இந்திரா நகர் பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டுக்கு செல்ல இரவு 11.10 மணி அளவில் ராபிடோ செயலி மூலமாக வாடகை இருசக்கர வாகனத்தை புக் செய்துள்ளார். 11.20 மணி அளவில் குறிபிட்ட இடத்திற்கு வாடகை இருசக்கர வாகனத்துடன் வந்த ஓட்டுநர் தீபக் பெண் பயணியிடம் ஓடிபி பார்க்க வேண்டும் என்று அவரது செல்போனை வாங்கி கொண்டார்.

மீண்டும் செல்போனை அவரிடம் திரும்ப வழங்காமல் வாகனத்தில் அவரை ஏற்றி கொண்டு தவறான வழித்தடத்தில் தேவனஹல்லி விமான நிலைய பாதையை நோக்கி ஓட்டுநர் வாகனத்தை செலுத்திய போது சந்தேகம் அடைந்த பெண் அவரிடம் வண்டியை நிறுத்த பலமுறை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து ஓட்டுநர் தீபக் தவறான வழியில் சென்று கொண்டு செல்போனையும் திரும்ப வழங்காமல் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்க காரணத்தினால் அதிர்ச்சி அடைந்த பெண்மணி ஓடும் வண்டியிலிருந்து எட்டிக் குதித்து தப்பியுள்ளார்.
பெண் பயணி எட்டி குதித்த போதும் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்ட நிலையில் இந்த காட்சி முழுவதும் அங்கிருந்து சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தீபக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.