மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி அருகே பாப்பம்பட்டி எஸ் கே சி நகர் பகுதியைச் சேர்ந்த துரை என்கிற திருமூர்த்தி இப்பகுதியில் கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார்.

திருமூர்த்தியும், மனைவி மாலதியும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். தற்போது அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் திருமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மது போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
அதைப்போலவே நேற்று பகல் நேரத்தில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த கணவன் தனது மனைவி மாலதி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கொலை செய்து விட்டு தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரது வீட்டில் இரவு நேரம் ஆகியும் லைட் எரியாததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து பார்த்துள்ளனர். அங்கு மாலதி இரத்த வெள்ளத்தில் சரிந்து பிணமாக கிடந்துள்ளார்.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி தாலுகா காவல் துறையினர் மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய திருமூர்த்தியை கைது செய்தனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.