கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பொருளூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாயிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 63). இவர் விவசாயி ஆவார். இவரது மனைவி பொன்னாத்தாள் (வயது55) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் செல்லமுத்து நாள் தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு செல்லமுத்து தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி பொன்னாத்தாளிடம் பூரி போட்டுத் தருமாறு கேட்டுள்ளார். நள்ளிரவு என்பதால் போட முடியாது என பொன்னாத்தாள் கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
![கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/09/18.jpg)
இதில் ஆத்திரம் அடைந்த செல்லமுத்து மனைவியை அடித்துள்ளார். பின்னர் செல்லமுத்து தனது அறையில் தூங்க சென்று விட்டார். கோபத்தில் இருந்த பொன்னாத்தாள் தினமும் தகராறு செய்து வரும் கணவரை என்ன செய்வதென்று தெரியாமல் கோபத்தின் உச்சத்தில் வீட்டில் வைத்திருந்த தேங்காய் எண்ணெய் எடுத்து அதை அடுப்பில் வைத்து சூடாக காய்ச்சி தூங்கிக் கொண்டிருந்த செல்லமுத்து மீது கொதிக்க கொதிக்க தேங்காய் எண்ணெய்யை ஊற்றிள்ளார்.
இதில் வலி தாங்காமல் செல்லமுத்து அலறியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து செல்லமுத்துவை உடனடியாக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த செல்லமுத்து திடீரென்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கள்ளிமந்தயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மனைவி பொன்னாத்தளை கைது செய்தனர். தாலி கட்டிய கணவனின் கொடுமை தாங்காமல் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.