திருவள்ளூர் அருகே காக்களூர் எடை மேடை பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து விவரம்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (எலக்ட்ரீசியன்). இவர் சம்பவத்தன்று காலை காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் தனது பேரக்குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுவிட்டு, தனது எலக்ட்ரீசியன் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காக்களூர் எடை மேடை அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த தனியார் கல்லூரிப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

சம்பவ இடத்திலேயே பரிதாப பலி: பேருந்து மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் மீது, பேருந்தின் பின்புறச் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கித் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த ராஜேந்திரனின் உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலைக் கண்டு கதறி அழுததுடன், சாலையில் படுத்துத் துயரப்பட்ட அவர்களது காட்சி காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
காவல்துறையினர் விசாரணை: தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றினர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி: விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதி பொதுமக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. சாலைகளில் பெருகிவரும் கனரக மற்றும் கல்லூரி வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
