உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மின்னஞ்சல், கூகுள் மற்றும் பேஸ்புக், இண்டகிராம், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதலங்கள், வங்கிச் செயலிகள், அரசின் அதிகாரப்பூர்வ சேவை தளங்கள் என பெரும்பாலும் அனைத்து இணைய பயன்பாடுகளுக்கும் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு முறையிலேயே லாகின்(Log in) செய்ய முடியும் . பெரும்பாலான வலைதளங்களுக்கு உள் செல்வதற்கே மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் எனப்படும் ஓடிபி அனுப்பப்பட்டு லாகின் செய்யும் முறைகள் இருந்து வருகின்றன.
அவ்வாறு பயனர்களால் பதிவு செய்யப்படும் பாஸ்வேர்டுகள் எங்காவது கசிவது, ஹேக்கர்களால் திருடப்படுவது போன்றவை நிகழும். அவ்வப்போது ஏதாவது ஒன்றிரண்டு குறிப்பிட்ட இணையதளங்களின் தரவுகள் கசிந்திருக்கின்றன. அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரிசெய்வதுண்டு. அவ்வாறு திருடப்படும் பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் சட்டவிரோதமாக டார்க் வெப் தளங்களுக்கு விற்றுவிடுவர்.

இந்த நிலையில் இணைய வரலாற்றில் இதுவரை காணாத நிகழ்வாக, முதன்முறையாக 1,600 கோடி ( 16 பில்லியன்) பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளன. லாகின் மற்றும் பாஸ்வேர்டுகள் கசிந்ததால் ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பயனாளர்களின் கணக்குகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக்கொண்டு மோசடி, இணையவழி திருட்டு முதலான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடவுச்சொற்களை திருடி அவற்றை ஹேக்கர்களிடம் கொடுத்து விட்டாலோ அல்லது டார்க் வெப் எனப்படும் தளங்களில் விற்று தவறான செயலுக்கு பயன்படுத்தப்பட்டு விட்டாலோ பெரும் ஆபத்துக்களை இது விளைவிக்கும். அதுவும் இ-மெயில், கூகுள், முகநூல், டெலிகிராம் முதல் அரசு இணையதளங்களின் பாஸ்வேர்டுகள் வரை திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் எண்ணிக்கு ஒரு இணையதள பக்கத்தின் லிங்கை அனுப்பி, அதனை ஓபன் செய்வதன் மூலம் தனிநபரின் தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர். இதனால் தான் தெரியாத எண்களில் இருந்து லிங்க்குகள் வந்தால் அதனை ஓபன் செய்ய வேண்டாம் என சைபர் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் தெரியாத அழைப்புகள் மற்றும் லிங்குகளை ஏற்காமல் இருந்தால் மட்டுமே இதுபோன்ற ஆபத்துகளை தவிர்க்க முடியும் என்று சைபர் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.