டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து திகார் சிறையிலிருந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையானார்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனை தொடர்ந்து, இதே வழக்கில் ஜூன் 26-ல் சிபிஐ திடீரென கைது செய்தது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்கியிருந்தது. இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை தொடர்பான சி.பி.ஐ வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று காலை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் 6 மாதங்களுக்கு பின்னர் இன்று மாலை சிறையில் இருந்து விடுதலையானார். அப்போது கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அப்போதெல்லாம் கடவுள் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், அதேபோல் இம்முறையும் தனக்கு கடவுள் உதவியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறையில் இருந்து வெளிவந்துள்ள தனக்கு மனஉறுதி 100 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையின் சுவர்கள் கெஜரிவாலை பலவினமடைய செய்யவில்லை என்றும் கூறினார். மேலும், நாட்டை பலவீனப்படுத்தும், பிரிவினையை ஏற்படுத்தும் அனைத்து சக்திகளுக்கும் எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும் முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.