ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தலங்களிலும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் நிறுத்த மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உத்தர விட கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அந்த மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்பது வெகுவாக குறைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் அல்லது அதிகம் கூடும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சூர்யாகாந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மலைப்பாங்கான பள்ளத்தாக்கு பகுதிகளில் முறையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இதனால் அவசரகால சூழலின் போது மருத்துவ வசதி உடனடியாக கிடைக்க வழிவகை செய்யும் என தெரிவித்தார்.

மேலும் மத்திய பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்தவும் கோரிக்கை வைத்தார். ஆனால் பொதுநலன் நோக்கமின்றி விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கூறினர். அதற்கு மனுதாரர் மனுவை திரும்ப பெற அனுமதி கேட்டதை அடுத்து மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி நட்டா