ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 32 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக எல்லைப்பாதுகாப்பு படையை சேர்ந்த 35 வீரர்கள் பேருந்து முலம் சென்று கொண்டிருந்தனர். புட்காம் மாவட்டம் பிரெல் வாட்டர்ஹெய்ல் அருகே மலைப்பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக புட்காம் மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.