மைசூரில் சிறுத்தை தாக்கியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு. நீதி கேட்டு அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி நரசிபுரா தாலுக்காவில் உள்ள கெப்பே குண்டி என்ற கிராமத்தில் நேற்று இரவு சிறுத்தை தாக்கி மேகனா என்ற கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
22 வயதான மேகனா டி நரசிபுரா நகரில் இறுதியாண்டு பிகாம் பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று இரவு தனது வீட்டின் பின்புறம் அவர் தனியாக அமர்ந்திருந்த போது திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதே கிராமத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை சிறுத்தை ஊருக்குள் நுழைந்துள்ளது.
கிராம மக்கள் புகாரை அடுத்து வனத்துறை அதிகாரிகள் அதே கிராமத்தில் சுமார் நான்கு இடங்களில் பொறிகள் அமைத்து சிறுத்தையை பிடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சிறுத்தை தாக்கி இரத்த வெள்ளத்தில் இருந்த மாணவியை கிராம மக்கள் டி நரசிபுரா அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த போது ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலமுறை சிறுத்தையை பிடிக்க புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தற்பொழுது இளம் பெண் உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். கிராம மக்கள் போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு டி நரசிபுரா சட்டமன்ற உறுப்பினர் அஸ்வின் குமார், மாவட்ட முதன்மை வனத்துறை அலுவலர் மாலதி பிரியா வருவாய் துறை அதிகாரிகள் என அனைவரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 7.5 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு, 5 வருடத்திற்கு மாதம் தோறும் ரூ.2000 இழப்பீடு, வனத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கொடுக்க பட்ட வாக்குறுதியை கிராம மக்கள் ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். இன்று காலை மேகனா உடல் பிரேத பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சொந்த கிராமத்தில் இன்று மதியம் இறுதி சடங்குகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.