பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக வியூகம் வகுக்க, ‘இந்தியா’கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
2029 மக்களவைத் தேர்தலுக்குள் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (பெண்கள் இடஒதுக்கீடு சட்டம்) நடைமுறைப்படுத்தப்பட, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் (Delimitation) செய்து, மக்களவை இடங்களை 543-லிருந்து 816-ஆக உயர்த்தி, அதில் 273 இடங்களை (33 சதவீத இடஒதுக்கீட்டைச் சாத்தியமாக்கும் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக) பெண்களுக்கு ஒதுக்க சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 16-18 தேதிகளில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூட்டப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும், அதன் “உண்மையான நோக்கத்துடன்” செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு கொள்கை அளவில் ஆதரவு தெரிவித்துள்ளன இருப்பினும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அரசியல் ஆதாயத்துக்காக அவசரமாக கொண்டு வரப்படுவதாகக் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி சந்திப்பில் ஒருங்கிணைந்த உத்தியை வகுத்து, சிறப்பு அமர்வில் ஒரே குரலில் பேச திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி ஆதரவு கோரியுள்ள நிலையில், கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் , ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி கேசி வேணுகோபால் ,திமுக சார்பில் டி ஆர் பாலு,திரிணாமூல் காங்கிரஸ் டெரெக் ஓ’பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி , ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), NCP உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
