ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்ற காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் இரு கூட்டணிகளும் சம அளவு இடங்களில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா கூட்டணி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி இந்தியா கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்கிற நிலையில், இந்தியா கூட்டணி கூடுதல் இடங்களை பிடித்து ஜார்க்கண்டில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
பாஜக 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பர்ஹைத் தொகுதியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். கான்தேவ் தொகுதியில் அவரது மனைவி கல்பனா சோரன் முன்னிலையில் உள்ளார்.