விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் மொரீஷியஸ் நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் சாமி தரிசனம் செய்தாா்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரீஷியஸ் நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கையம்மன் கோயிலுக்கு இன்று காலை வந்தார். அங்கு அறநிலையத்துறை ஆணையர் கே.ராமச்சந்திர மோகன், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பொர்ரா ராதாகிருஷ்ணா (காந்தி), தேவஸ்தான செயல் அலுவலர் வி.கே.சீனநாயக், மாவட்ட கலெக்டர் லட்சுமி ஷா, நகர காவல் ஆணையர் ராஜசேகர பாபு ஆகியோர் மொரீஷியஸ் அதிபரை வரவேற்றனர். பின்னர் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்களால் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு கோவிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்து வைத்தனர். மொரீஷியஸ் அதிபர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரது மனைவிக்கு கோயிலின் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் அம்மன் திருவுருவப் படம் மற்றும் பிரசாதத்தை தரம்பீர் கோகுல் தம்பதியினருக்கு வழங்கினர்.
6, 7 ம் தேதிகளில் திருப்பதி மாவட்டத்திற்கு வரும் மொரிசியஸ் அதிபர் ஏழுமலையான் கோயில் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார்.



