ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்றுப் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை தீவிரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளது.


8 பேருக்கு தீவிரப் பாதிப்பு:
தற்போதைய நிலவரப்படி, கடப்பா மாவட்டத்தில் மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு தீவிரமாக (Active Cases) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து இருவர் பலி:
இந்த திடீர் பரவலில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். இதில், கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி (CMC) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு நபரும் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதை அடுத்து, பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு:
கொரோனா மரணங்கள் மற்றும் திடீர் பாதிப்பு காரணமாக, கடப்பா மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி ஆந்திர மாநில அரசும் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
