பள்ளி குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு கிடைக்க ஒன்றிய அரசு, தமிழ் நாட்டிற்கு இந்த ஆண்டில் 44,017 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் பள்ளி விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் ஒவ்வொரு குழந்தைக்கும் சராசரி ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறதா? தமிழகத்தில் எத்தனை மாணவ,மாணவிகள் பயன்பெறுகின்றனர் என எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 1-8ம் வகுப்பு வரை அல்லது 6-14 வயது உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவு என்பது விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களுக்கும் வழங்கப்படுவதை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு உறுதி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதற்காக “பிரதம மந்திரி போஷன்” எனும் திட்டமும் நடைமுறையில் இருப்பதாகவும் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 43,190 பள்ளிகளை சேர்ந்த 45 லட்சத்து 64 ஆயிரத்து 151 மாணவ மாணவிகள் பயன் பெற்று வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் 2022-23ம் நிதியாண்டுக்கு தமிழக அரசுக்கு 44,017.43 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 25,026.75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு குழந்தைக்குமான தொகை அதிகரித்து வருவதாகவும் அதனை மத்திய அரசு உரிய முறையில் ஆலோசித்து வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பால்வாடி மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 4.97 ரூபாய் செலவாகும் என முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இப்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 5.45 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.




