சென்னையில், “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொட்டும் மழையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோருடன் நடை பயிற்சி மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் தொடர்பான நோய் பாதிப்புகளை குறைக்கும் ஒரு விழிப்புணர்வு திட்டமான சுகாதார நடைபாதை என்ற திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடக்க நிகழ்வாக சென்னை பெசன்ட் நகர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து கடற்கரை சாலை வரை 8 கிலோமீட்டர் நடைபாதையை தொடங்கி வைத்து நடைப் பயிற்சியை அவர் மேற்கொண்டார்.
“நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் சிறப்பு கல்வெட்டினை அமைச்சர் உதயநிதி-தொடங்கி வைத்ததுடன் காணொலி காட்சி வாயிலாக 37 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை துவக்கி வைத்தார். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவை உறுப்பினர் கனிமொழி, சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, பிரபாகர்ராஜா, காரம்பாக்கம் கணபதி, தாயகம் கவி, பரந்தாமன், காங்கிரஸ் கட்சியின் ஹசன் மெளலானா, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் , இந்து ராம், மருத்துவத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பெடி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறுத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மக்கள் நல் வாழ்வுத்துறையின் இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட ஆறு சிறப்பு திட்டங்கள் ஏற்கனவே உள்ள நிலையில், ஏழாவது சிறப்பு திட்டமாக இந்த “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார். ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள, உடற்பயிற்சி அவசியம்” என அவர் வலியுறுத்தினார்.
மாரடைப்பு நோய் உலகில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒரே தீர்வு, நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நோய் வருவதற்கு முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்தையொட்டி, சென்னை பெசண்ட் நகரில், 8 கிலோமீட்டர் அளவுக்கு வைக்கப்பட்டுள்ள 40 சிலைகள் செல்ஃபி பாயிண்டாக இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி மேடையில் பேசுகையில், இடி மின்னல் மற்றும் கடும் மழையிலும் நடந்து வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியனை மாரத்தான் சுப்பிரமணியன் என்று புகழ்ந்த உதயநிதி, இளைஞர்கள் எல்லாருக்கும் அவர் Inspiration-ஆக உள்ளார் என்றும் அவருக்கு இன்ஸ்பிரேஷனாக முதலமைச்சர் உள்ளார் என்றும் கூறினார். சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தினை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
“நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி வலியுறுத்தினார்.