ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டு அமைச்சர்களைக் கொண்ட ஆட்சியைப் பெற்றுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு நேர்மையான, எளிமையான காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்பதே தங்களது கனவு என்றும், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் ஆட்சியே அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் திட்டங்களுக்குப் பாராட்டு: தவெகவின் 100 நாள் ஆட்சி குறித்தான கேள்விக்குப் பதிலளித்த அவர், தொடக்கம் நன்றாக இருப்பதாகவும், லஞ்சம் இல்லாத மற்றும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.
மேலும், மகளிர் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்ட சிங்கப்படை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும் வரவேற்கத்தக்கவை என்றார்.
நீட் தேர்வு விவகாரமும் சி.வி. சண்முகத்தின் விமர்சனமும்: பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாட்டார்கள் என்ற சி.வி. சண்முகத்தின் விமர்ச்சனத்திற்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், சி.வி. சண்முகம் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகக் கூறினார்.
காந்திக்கும் கோட்சேவுக்கும் எப்படிக் கோட்பாடுகள் வேறுபடுமோ, அதேபோல் காங்கிரஸும் பாஜகவும் வெவ்வேறானவை எனக் குறிப்பிட்ட அவர், வரலாற்றைச் சரியாகப் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு சாபக்கேடு என்றும், 2029-ல் ராகுல் காந்தி பிரதமராகும் போது நீட் விலக்கு அளிக்கப்படும் என்றும், அப்போது சி.வி. சண்முகம் தன் கண்ணாடியை மாற்றிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேகதாது அணை மற்றும் அன்புமணி ராமதாஸ் குறித்த கேள்வி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகத் தெளிவாக இருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் அது எதிரானது என்பதால் மேகதாது அமைக்கப்படக் கூடாது என்பதே நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.
மேலும், அன்புமணி ராமதாஸ் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பிய அவர், ஒன்றிய அரசுடன் கூட்டணியில் உள்ள அன்புமணி, மேகதாது அணைக்கு எதிராகத் தொகுதி மறுவரையறையில் ஆதரவு தர மாட்டோம் என்று சொல்லவோ அல்லது அணைக் கட்டப்பட்டால் ஆதரவிலிருந்து விலகிக் கொள்வோம் என்று சொல்லவோ தைரியம் இருக்கிறதா எனச் கேள்வி எழுப்பினார். இதே கேள்வியை எடப்பாடி பழனிசாமியையும் நோக்கி அவர் முன்வைத்தார்.
