2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது.

அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தமளிப்பதாக கூறி தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து கிளம்பினார். ஆளுநர் வெளிநடப்பு செய்த போது திமுக எம்எல்ஏக்கள் ‘வெளியே போ’ என்று கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச தொடங்கியபோதே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே ஆளுநர் அவை மரபை மீறிவிட்டதாக திமுகவும், முதலமைச்சர் அவை மரபை மீறியதாக எதிர்க்கட்சி மற்றும் பாஜகவினரும் மாறி மாறி குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175, 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும்போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ, உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது, அவ்வாறு தடங்கலோ அல்லது குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பெற்று அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனடிப்படையில், நேற்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வில், ஆளுநர் உரைக்கு முன்னர் இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திக்கொண்டிருந்த போது இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திய பின்னர் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன் வரவேண்டும். அதுவே சட்டம்! அதுவே ஜனநாயகம்! முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.