2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
ஒவ்வொரு, ஆண்டும் அந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்குகிறது.

சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ஆளுநர் ஆர்.என். ரவி, தலைமைச்செயலகத்துக்கு 9.50 மணிக்கு வருகிறார்.
ஆளுநரை பேரவைத் தலைவர் மு. அப்பாவு, செயலர் கி. சீனிவாசன் ஆகியோர் வரவேற்கின்றனர். பின்னர், காலை 10 மணிக்கு அரங்குக்குள் வரும் ஆளுநர் தனது உரையை தொடங்குவார்.
ஆளுநர் உரையை முடித்ததும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு. அப்பாவு தொடங்குவார்.
தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து பாராட்டியும், சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் வெளியாக வாய்ப்புள்ளது.
மேலும், தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான, சில வலியுறுத்தல்களையும் அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.