தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தேமுதிகவை நடிகர் விஜயகாந்த் தொடங்கினார். அப்போது மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய்காந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார். இதனால் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகளை அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனன் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவுடன் இருப்பதால், பிரேமலதாவிற்கு ‘செயல் தலைவர்’ என்ற பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “தற்போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. தமிழ்நாட்டிற்கு யாரால் நன்மை கிடைக்கும் என்பதை ஆராய்ந்து கூட்டணி அமைப்போ,. நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார். பேசுவதிலும், நடப்பதிலும் சற்று சிரமம் உள்ளது. விரைவில் குணமாகி மக்களை சந்திப்பார். பெண்களால் எதையும் சாதிக்கமுடியும். தமிழ்நாட்டில் வரும் காலங்களில் நல்லதொரு ஆட்சி மாற்றம் வரும்” எனக் கூறியிருந்தார்.