வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகிவருகிறது. தமிழகத்தில் கால் வைக்க பாஜக முனைப்பு காட்டிவருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா என 2 தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி இரண்டிலும் வெற்றி பெற்றார். அதன்பின் 2019 நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் நின்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்று, இரண்டாம் முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி, தமிழ்நாட்டின் ராமநாதபுரம் என இரு இடங்களிலும் மோடி போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம், கலாச்சார மற்றும் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடம் என்பதால் அங்கு அவர் போட்டியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி நிற்கப்போவதாக sunday guardian பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. அதாவது வாரணாசி, காசி மற்றும் மற்றொரு முக்கிய சிவஸ்தலமான ராமேஸ்வரம் உள்ள தொகுதி என்பது குறிப்பிடதக்கது.