விஜயா – நாகர்கோவில்
கேள்வி – நடிகை விஜயலட்சுமி பிரச்சனையில், “கட்சியில இவ்வளவு பெண்கள் இருக்கும் போது உனக்கு வேற பொம்பளை கிடைக்கவில்லையா?” ‘போயும் போயும் அவளை போய் பிடிச்சிருக்க’ என்று கயல்விழி திட்டியதாக சீமான் பேசியிருக்கிறாரே! உண்மையில் அப்படி சொல்லி இருப்பாரா அல்லது சீமானே சொல்கிறாரா? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் – அவரோ சீமான், கயல்விழியோ சீமானின் மனைவி, அவர்கள் எது வேண்டுமானாலும் பேசுவார்கள்.
எனக்கு ஒரு ரஷ்யா கதை ஞாபகத்திற்கு வந்தது. அந்த கதையின் தலைப்பு “நடிகை அல்லது நாடகக் காரி”.
ஒரு மதியப் பொழுதில் நடிகை பாஷா(விஜயலட்சுமி) வீட்டுப் படுக்கையறையில் அவள் ஆசை நாயகனாக வந்து செல்பவன் கல்பகோவ் (சீமான்) இருந்தான். தெருக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. கல்பகோவ் அடுத்த அறைக்கு சென்று மறைத்துக் கொள்கிறான். பாஷா கதவை திறக்கிறாள். வாசலில் ஒரு பெண் நிற்கிறாள். என்ன வேண்டும் என்கிறாள் பாஷா’ ‘என் புருஷன் வேண்டும்’ என்கிறாள் வந்தவள். யார் என்கிறாள்? பாஷா, வந்தவள் ‘கல்பகோவ்’ என்கிறாள். ‘அவர் இங்கு இல்லை’ என்று அச்சத்துடன் பதில் சொல்கிறாள் பாஷா.
‘நீ வெட்கம் கெட்டவள். அற்பப் பிராணி, கொடுமைக்காரி என்றெல்லாம் திட்டுகிறாள் வந்தவள். சுற்றிலும் வேடிக்கை பார்க்கிறார்கள். சிறுமையினால் வெலவெலத்துப் போகிறாள் பாஷா.
என் புருஷன் அலுவலகத்தில் பணம் கையாடி விட்டான். ஆயிரம் ரூபிள்கள். அவரை கைது செய்யப் போகிறார்கள். நானும் என் குழந்தையும் நடுத்தெருவில் நிற்கப்போகிறோம். என் புருஷனை சைபீரிய சிறைக்கு அனுப்பப் போகிறார்கள். என்றபடி அந்தப் பெண் அழுகிறாள். பாஷாவை விபச்சாரி என்று திட்டுகிறாள்.
உனக்காகத்தான் அவர் திருடினார் என்று சொல்லி பணம் அல்லது நகைகளைக் கேட்கிறாள். என்னிடம் பணம் நகை இல்லை என்கிறாள் பாஷா.
அந்தப் பெண்ணின் பேச்சும், அழுகையும் பாஷாவிடம் வெட்கமும், துயரமும் ஒரு சேர ஏற்படுகிறது. என் குழந்தைகள், பசியால் தெருவில் நின்று பிச்சை எடுக்கப் போகிறார்கள் என்று ஓலமிடுகிறாள்.
குழந்தைகள் பிச்சை எடுக்கும் காட்சி மனக்கண் முன் தொன்றி பாஷாவை நடுக்கம் கொள்ளச் செய்கின்றன. கல்பகோவ் கொடுக்காத தன்னுடைய இரண்டு நகைகளை எடுத்து இவ்வளவுதான் என்னிடம் இருக்கிறது. எடுத்துக் கொண்டு போ என்கிறாள்.
அந்தப் பெண்ணோ, ‘உன் காலில் விழுகிறேன். என் குடும்பத்தை காப்பாற்று’ என்கிறாள். இந்த சொற்கள் பாஷாவை சிறுமைப் படுத்தியது.

ஒரு முடிவுக்கு வந்த பாஷா, தன் மேசைக்குள் இருந்த அனைத்துத் தங்க நகைகளையும் எடுத்து அந்த பெண் முன் போடுகிறாள். இவற்றில் எதுவுமே அவன் கொடுத்தது இல்லை என்கிறாள். அந்தப்பெண் நிதானமாக எல்லா நகைகளையும் சேர்த்து எடுத்து செல்கிறாள்.
மனைவி சென்றதும் கல்பகோவ் வெளியே வருகிறான். என்ன நகை எனக்கு நீ வாங்கி கொடுத்தாய்? நான் எப்பொழுதாவது உன்னிடம் எதையாவது கேட்டிருக்கிறேனா?
கல்பகோவ் சொல்கிறான். “கடவுளே, என் மனைவி கண்ணியமானவள், குடும்ப ஸ்திரி, தூய்மையானவள். அவள் உன் காலில் விழப் போனாளே , ஒரு விபச்சாரியின் காலில் குலப் பெண் விழுவதாவது.
கல்பகோவ் மனைவியை தேடி ஓடுகிறான். பாஷா, கட்டிலில் விழுந்து ஓ வென்று கதறி அழுகிறாள். மூன்று வருஷங்களுக்கு முன் ஒரு காரணமும் இல்லாமல் அவளை ஒரு வியாபாரி அடித்தது அவளுக்கு மீண்டும் ஞாபகம் வந்து, அவள் அழுகையை அதிகப்படுத்தியது.
அந்த இரண்டு பெண்களில் யார் நடிகை என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. அதைவிடவும் தான் நேசித்த பாஷாவை நோக்கி கல்பகோவ் விசிறி எறிந்த வார்த்தைகள். இந்த மூவரில் யாரை நாம் மனிதராக ஏற்கப்போகிறோம்?…