இந்திய கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
என்.கே.மூர்த்தி பதில்கள்
சுலைமான் – அம்பத்தூர்
கேள்வி – தந்தை பெரியாரை ஜெயலலிதா நேரில் பார்த்திருக்கிறாரா? இருவரின் நட்பைப் பற்றி கூறுங்களேன்.
பதில் – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் “தாய்” பத்திரிக்கையில் எழுதிய தொடரில் பெரியாரைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை நீங்களும் படியுங்கள்…
1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ”சூரியகாந்தி” தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.
அதனால்தான் அவரைச் சந்திக்கவும்; அவர் கரங்களால் பரிசு பெற்றுக் கொள்ளவும், அவருடைய ஆசியைப் பெறவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளர் – இயக்குநர் திரு.முக்தா வி.சீனிவாசன் அவர்களுக்கு அதற்காக இன்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.
நன்றாக ஞாபகம் இருக்கிறது அன்றைக்கு விழா தொடக்கத்தில், நான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டும் என்று திரு. முக்தா சீனிவாசன் கேட்டுக் கொண்டார். அழைப்புத்தாள்களிலும் நிகழ்ச்சி நிரலில் அவ்வாறே அச்சிடப்பட்டது. அதற்காக முன்கூட்டியே வீட்டில் பல முறை நானே பாடிப்பார்த்துக் கொண்டேன்.
வீட்டில் தனியாக ஒத்திகை செய்தபோது நன்றாகவே பாடினேன். ஆனால் மேடைக்குச் சென்று, அங்கே தந்தை பெரியார் அவர்களைக் கண்டதும் என்னையும் மீறி ஒரு நடுக்கம் தோன்றி, அந்த நடுக்கம் பாடும்போதும் லேசாக என் குரலில் வெளிப்பட்டது. அது எனக்கே தெரிந்தது, என்றாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பிறகு திரு. முத்துராமன் கேட்டார் – ‘நன்றாகத்தான் பாடுவீர்களே? இன்றைக்கு ஏன் குரலில் அப்படியொரு நடுக்கம்?” “தனியாக மேடையில் நின்று பாட வேண்டும் என்றதும் கொஞ்சம் பயமாக இருந்தது. துணைக்கு யாராவது பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றேன்.
“முன் வரிசையில் திரு.டி.எம். சவுந்தரராஜன் உட்கார்ந்திருந்தாரே? அவரையே கேட்டிருக்கலாமே?” என்றார் திரு.முத்துராமன்.
“இல்லை… அழைப்புத் தாளில் அவரும் பாடுவார் என்று அச்சிடப்படவில்லை. முன் அறிவிப்பின்றி திடீரென்று மேடைக்கு அழைத்தால் தவறாக கருதுவாரோ என்று எண்ணி விட்டு விட்டேன்” என்றேன்.
உண்மையில் என் நடுக்கத்துக்குக் காரணம் அதுவல்ல. அதற்கு முன்பு மேடைகளில் தனியாகப் பாடியவள்தான். அன்றைக்கு முதன்முறையாக தந்தை பெரியார் அவர்களின் முன்னிலையில் பாட வேண்டும் என்றதும் அப்படியாகி விட்டது!
ஆனால் பிறகு பரிசைப் பெற்றுக் கொள்ள அருகில் சென்றதும், தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு அன்பாக புன்னகைத்து, என் தலைமீது கைவைத்து ஆசி கூறினார்கள். அப்பொழுது ‘இவ்வளவு அன்பாகப் பழகும் பெரியாரைப் பார்த்து அனாவசியமாக பயந்தேனே!” என்று நினைத்தேன்.
பெரியாரைப் பற்றி நினைக்கையில், அவர் பரப்பிய கொள்கைகளைப் பற்றியும், அவர் கொண்டு வந்த சமுதாய சீர்திருத்தங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன்.
* பெண்கள் விடுதலை
* விதவை மறுமணம்
* பெண்களுக்கு சொத்துரிமை
* பெண்களுக்கு சமத்துவம்.
– இந்த உயரிய லட்சியங்களைப் பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள்.
“பெண்களுக்கு சமத்துவம்” என்ற ஓர் அடிப்படை லட்சியத்தை எடுத்துக் கொள்வோம். இது பண்டைக் காலத்தில் தமிழர் சமுதாயத்தில் நிலவியது தான்.
“சமத்துவம்” என்றாலே மற்ற அனைத்தும் அதற்குள் அடங்கி இருப்பதாகத்தான் பொருள் கொள்ளவேண்டும்.
ஆண்களோடு பெண்களுக்கும் சமத்துவம் என்னும்போதே – பெண்கள் விடுதலை பெற்றுவிட்டார்கள் என்று தான் அர்த்தம்.
ஓர் ஆண்மகனின் மனைவி இறந்து போனால் அவன் மறுமணம் புரிய எந்தச் சமுதாயத்திலும் தடை இல்லை, எனவே பண்டைக் காலத்தில் தமிழ்ப் பெண்கள் சமத்துவம் பெற்றிருந்தார்கள் என்னும்போதே – விதவை மறுமணமும் அதில் அடங்கியதாகவே பொருள் கொள்ளலாம். பெண்களுக்கு சமத்துவம் அளித்த பண்டைக் காலத்து தமிழர் சமுதாயத்தில் பெண்களுக்கு சொத்து உரிமையும் நிச்சயமாக இருந்தது என்றே கூறலாம்.
திராவிடர் இயக்கத்தின் மறு பெயரே ”சுயமரியாதை இயக்கம்” என்பதாகும்.
“சுய மரியாதை” என்றாலே அதன் மையப் பொருள்; அடிப்படை விளக்கம் – ஒருவர் தன் விருப்பப்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். அதுவே உண்மையான ‘விடுதலை’.
மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம், தகுந்த வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்வதே ஆகும். ”ஆயிரங்காலத்துப் பயிர் திருமணம்” என்பது மிகவும் உண்மை. காலம் பூராவும் ஒன்றாக வாழப் போவது கணவனும் – மனைவியும் தானே தவிர, அவர்களுடைய பெற்றோர்களோ மற்ற சுற்றமோ நட்போ அல்ல.
கணவன் – மனைவி உறவு சரியாக அமையவில்லை என்றால், அந்த இருவரின் வாழ்வும் வீணானதாகவே கருத வேண்டும். எத்தனையோ பேர்களது வாழ்வில் மற்ற எல்லாம் இருந்தும், இந்த உறவு திருப்திகரமாக அமையாததால், எதுவுமே இல்லாதவர்களாக, எல்லாம் இழந்தவர்களாக இருப்பது போன்ற உணர்வை அவர்களே பெறுகிறார்கள்.
அதேசமயத்தில் இன்னும் எத்தனையோ பேர்களது வாழ்வில், இந்த உறவு சரியாக அமைந்துவிட்டதால் லௌகீக ரீதியாக வேறு எதுவுமில்லை என்றாலும் எல்லாம் பெற்று விட்டவர்களாகத் தங்களையே கருதிக் கொள்கிறார்கள். இன்னும் பலரது வாழ்க்கையில் கணவன் – மனைவி உறவு அர்த்தமுள்ளதாக, ஸ்திரமானதாக, பலமானதாக, முழுமை பெற்றதாக அமைந்து விடுவதால், அதுவே அவர்கள் உலகில் பல வியக்கத்தக்க சாதனைகள் புரிய அஸ்திவாரமாக, தூண்டுகோலாக விளங்கியிருக்கிறது.
ஓர் ஆணுக்குத் தன் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்ளவும்; ஒரு பெண்ணுக்கு தன் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணைவரைத் தேடிக் கொள்ளவும் உரிமை அவசியம் இருந்தாக வேண்டும்.
அந்தச் சுதந்திரத்தைப் பறி கொடுத்தோமானால் – ”சுயமரியாதை” என்று பேசிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. நமக்குப் பிடித்த, நமக்கு உகந்த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை நமக்கு இல்லை என்றால், அந்த அடிப்படை உரிமையை விட்டுக் கொடுத்தோமானால், சுய மரியாதையை இழந்து விட்டதாகத்தான் கருதவேண்டும்.
ஆடலரசு – ஆவடி
கேள்வி – இந்திய கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில் : தொடக்கத்தில் இந்திய கூட்டணியில் தடுமாற்றம் இருந்தாலும் தற்போது கூட்டணியின் பலம், செல்வாக்கு அதிகரித்து வருகிறது. 80 தொகுதிகள் உள்ள உத்தரப்பிரதேசத்தில்அகிலேஷ் யாதவ் தலைமையில் இயங்கும் சமாஜ்வாடி கட்சிக்கு 63 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ஒப்பந்தம் ஆகியுள்ளது. இது அந்த கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றி. அதேபோன்று குஜராத், டில்லி, கோவா மற்றும் அரியானா ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே ஒப்பந்தம் ஆகியுள்ளது. இதேபோன்று மத்திய பிரதேசம், பீகார் போன்ற மற்ற மாநிலங்களிலும் கூட்டணி அறிவிப்புகள் விரைவில் வர வாய்ப்பு இருக்கிறது.
இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடையாத நிலையில் “டைம்ஸ் நவ்- மேட்ரைஸ் என்சி ஆகிய நிறுவனங்கள் எடுத்த கருத்து கணிப்பில் பாஜக விற்கு 300 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் இந்திய கூட்டணிக்கு 190- 200 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் மற்றவை 20 தொகுதிகள் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 38 தொகுதிகள் பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தொகுதி அதிமுக பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த சர்வே தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பாஜக வின் வாக்கு வங்கி சற்று அதிகரித்து இருப்பதாகவும், அதிமுகவின் ஓட்டுகள் சரிவடைந்து இருப்பதாகவும் கருத்து கணிப்பு கூறுகிறது.
அப்பு – செங்குன்றம்
கேள்வி – வீரம் என்றால் என்ன?
பதில் : வீரம் என்பது உடல் வலிமையை காட்டுவது, எதிரில் இருப்பவரை அஞ்ச வைப்பது, மீசையை முறுக்குவது , வேட்டியை மடித்து கட்டுவது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது எதுவும் வீரம் அல்ல.
உடல் பலத்தை தாண்டி வீரம் எங்கே இருக்கிறது?
ஒரு காலத்தில் உலகமே ஒரு மனிதரை கண்டு அச்சம் கொண்டது. அந்த மனிதர் யாரையும் பயமுறுத்த வில்லை. எவரை கண்டும் பயந்ததும் இல்லை. கடைசி வரை துணிந்தே நின்றான். ஒருமுறை கூட வன்முறை நிகழ்த்தாதவன். வன்முறை மீது நம்பிக்கை இல்லாதவன். அடுத்த வேலை உணவுவிற்கு வழி இல்லை, பிணியில் இருந்து தன் மனைவி குழந்தைகளை கூட காப்பாற்ற முடியாதவனை பார்த்துதான் உலகம் அஞ்சியது. அப்படி என்ன அவனிடம் பேராயுதம் இருந்தது? சிந்தனை. இடைவிடாமல் சிந்தித்து கொண்டே இருந்தான்.
வறுமை , பசி, பட்டினி , பஞ்சம் , நோய் , இறப்பு என்று அடுக்கடுக்காக வந்த போதிலும் அவன் சிந்திப்பதை மட்டும் நிறுத்திக்கொள்ளவே இல்லை. பல முறை நாடுகடத்தப்பட்டான் , சிந்திப்பதை நிறுத்தவில்லை. அப்படி எதை பற்றித்தான் சிந்தித்தான்? உலக தொழிலாளர்கள் ஒன்று கூடுவதை பற்றி சிந்தித்து கொண்டே இருந்தான். உலக சமத்துவத்தை பற்றி சிந்தித்து கொண்டே இருந்தான். அணு ஆயுதம் ஏந்திய ஹிட்டலருக்கு அச்சப்படாத உலகம், தன் சொந்த குழந்தைகளை கூட காப்பாற்ற முடியாத கார்ல் மார்க்ஸை பார்த்து அச்சம் கொண்டது.
உலக மக்கள் அவன் கல்லறையில் நாள் தோறும் பூக்கள் சிந்த , தன் சிந்தனையிலேயே உயிர் பிரிந்தார் கார்ல் மார்க்ஸ்.
வீரம் என்பது பயம் இல்லாதது போல் நடிப்பது அல்ல. வீரம் என்பது சிந்தித்து கொண்டே இருப்பது. கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பது, பதில்கள் சொல்லி கொண்டே இருப்பது. வீரம் என்பது பகுத்தறிவு. வீரம் என்பது அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது. வீரம் என்பது அறத்தின் பக்கம் நிற்பது. வீரம் என்பது வேறுபாடுகளை களைவது.
இயற்கைக்கு எதிராய் கட்டமைக்கப்படும் அனைத்தும் அநீதிகளையும் உடைத்தெறிய நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வீரம் தான்.
அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி– பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது. மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031 |