நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் பெரும் வெற்றி பெற்று பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
இந்த நிலையில் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா இந்தப்படத்தைப் பார்த்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். இந்த சம்பவத்தை முன் வைத்து பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது விவாதங்களை கிளப்பியுள்ளது.
அவரது பதிவில், ‘‘காவல்துறையில் பணியாற்றிய சிவகார்த்திகேயனின் தந்தை 2002 ஆம் வருடம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவர் இறந்து 19 ஆண்டுகள் கழித்து அவரது இறப்புக்கும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் தொடர்பு இருப்பதாக அதிரடியாகப் பேசி 2021 ல் சர்ச்சையை கிளப்பினார் ஹெச்.ராஜா!
அப்போது காவல்துறையில் அக்கட்சி சார்பாக புகார் மனு தரப்பட்டு, ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடத்தினார்கள். அதன் பிறகு, ‘‘தவறாக சொல்லிவிட்டேன்’’எனப் பின்வாங்கினார் ஹெச்.ராஜா!
அப்போது, ’’ஹெச்.ராஜா கூறியது தவறு. என் தந்தை மரணத்திற்கும் இஸ்லாமியத் தலைவரான ஜவாஹிருல்லாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை’’என ஒரு வார்த்தை சிவகார்த்திகேயன் சொல்லி இருந்தால் கூட, பதற்றம் தணிந்திருக்கும். அவதூறையும், அவமானத்தையும் பெற்றவர்களுக்கு ஆறுதல் கிடைத்திருக்கும். ஆனால், அன்று வாய் மூடி மெளனித்து இருந்தவர் தான் சிவகார்த்திகேயன்.
அப்படிப்பட்ட ஹெச்.ராஜாவிடம் – தன் தந்தை இறப்பில் அரசியல் ஆதாயம் தேடிய அரசியல்வாதியிடம் – பூங்கொத்தும், பாராட்டும் பெற்று மகிழும் சிவகார்த்திகேயனை எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை.
தான் நடித்த படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக இந்தச் செயலை அவர் செய்திருக்கலாம்.
ஆனால், அமரன் படம் வெளியான போதே இந்த போட்டோவும் வெளியாகியிருந்தால் நான் இந்தப் படத்தை பார்ப்பதையே தவிர்த்திருப்பேன். நான் மட்டுமல்ல, தமிழக மக்கள் பெரும்பாலோரின் மனநிலையும் அது தான்!
‘‘மேஜர் முகுந்தின் தியாகம் அளப்பரியது’’ என ஆகா, ஒகோவெனப் பாராட்டியுள்ளார் ஹெச்.ராஜா! அவரது பாராட்டுக்கு ‘‘முகுந்த் ஒரு பிராமணர் என்பது காரணமா?’’ என்ற விவாதத்திற்கு நான் போக விரும்பவில்லை. அவர் எந்த ஜாதியானாலும் போற்றுதலுக்கு உரியவர். இதில் ஒருபோதும் மாற்று கருத்தே இல்லை.
எனது முன்னாள் நண்பர் ஹெச்.ராஜாவிற்கு ஒரு கேள்வி!
இந்தப் படத்தில் தேசத்திற்காக உயிரை தந்த முகுந்த் ஒரு தியாகி, வீரர் என்றால், அவரை விஞ்சும் வகையில் அன்பும், அர்ப்பணிப்புமுள்ள ஒரு காதலியாக, மனைவியாக சொந்தக் குடும்பத்தின் எதிர்ப்புகளை மீறி, உறுதி குலையாமல் காதலனே பின்வாங்கிக் கொள்கிறேன் என்ற போதும், தான் பின் வாங்காமல் போர்க்களத்தில் போராடும் இராணுவ வீரனுக்கு தைரியமாக வாழ்க்கைப்பட்டாரே, இந்து ரெபக்கா வர்கீஸ் அவரும் பாராட்டுக்கு உரியவர்.
காதல் கணவனை ராணுவத்திற்கு தாரை வார்த்து பிரிந்து வாட நேர்கையிலும் காதலில் காட்டும் பிடிவாதம், கல்யாணத்திற்கு பிறகு கணவன் எப்போது வருவார் என்பதை உறுதிபடுத்த முடியாத சூழல்களில் தவித்தும், இளம் வயதில் சின்னஞ்சிறு குழந்தையுடன் கணவனை பறி கொடுத்தும் பிறர் முன்பு அழமாட்டேன் என கணவனுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியும் வாழ்நாள் முழுமையும் விதவை வாழ்வை எதிர் கொண்ட ரெபக்கா வர்கீஸும் ஒரு வீரப் பெண்மணி, தியாகி என்பதை நான் ஏற்கிறேன். மனசாட்சியுள்ள யாருமே ஏற்பர். உங்களால் அவள் கிறிஸ்துவப் பெண் என்பதையும் கடந்து ரெபக்கா வர்கீஸின் தியாகத்தை, மனஉறுதியை போற்ற முடியுமா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.