வயதில் மூத்த திறமையானவர்களை முதியோர் என்று அழைப்பதை விட இளைஞர்களுக்கான ரோல் மாடல் என அழைப்பதே பொருத்தமானது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மூத்தவர்களுக்கான 19-ஆவது தடகளப் போட்டிகள், நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது.
இதில், 100 மீட்டர் 400 மீட்டர் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட ஏராளமான போட்டிகளில், நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட வயது மூத்த ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்கள் வயதினை மறந்து விளையாடினர்.
அமைச்சர்கள் ரகுபதி, மெய்ய நாதன் மற்றும் மூத்தோர் தடகள விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் செண்பக ராமன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை ரசித்து, பரிசுகளை வழங்கினார்.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கும் என உறுதி அளித்தார்.
போட்டிகளில் பங்கேற்றவர்களை மூத்தவர்கள் என பலர் அழைத்தாலும் தம்மை பொருத்தவரை, அவர்கள் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கான ரோல் மாடல்கள் என்று கூறி, உதயநிதி ஸ்டாலின் உற்சாகமூட்டினார்.