இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கான்பூரில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களை அடித்ததே உலக சாதனையாக இருந்த நிலையில், விராட் கோலி 594 இன்னிங்ஸ்களிலேயே 27,000 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்த 4-வது வீரராகவும்
கோலி சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கரும், அடுத்தடுத்த இடங்களில் குமார் சங்கக்கரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர்.

இதனிடையே வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 300-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெ ட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 3000க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் சாதனை பட்டியலில் இம்ரான் கான், கபில் தேவை முந்தி 2- வது இடத்தை பிடித்துள்ளார்.

இவர் 74 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். 72 போட்டிகளில் இந்த சாதனையை படைத்த இங்கிலாந்தின் இயான் போத்தம் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.


