ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று: உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி எதிர்பார்ககப்பட்ட ஒன்று தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரினா விளையாட்டு மைதானத்தில், தளபதி கோப்பை பெண்கள் T-20 கிரிக்கெட் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், விளையாட்டு மேம்பாட்டு அணியின் இலட்சிணையையும் உதயநிதி வெளியிட்டார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் நிகழ்ச்சியே கலைஞருக்கு பிடித்த கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. திமுகவில் உள்ள அணிகளுக்கு இடையே, எந்த அணி நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது என்ற போட்டி இருக்கும், அதில் விளையாட்டு மேம்பாட்டு அணி வெற்றி பெற்றுள்ளது. ரூபாய் 25 கோடி மதிப்பில் முதலமைச்சர் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, விளையாட்டுத்துறை இணைந்து பணியாற்றி விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
இந்த போட்டி இன்று தொடங்கி வரும் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வெற்றி, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மேலும் அதிமுகவின் தோல்வி குறித்து விமர்சிக்க விரும்பவில்லை” என்றார்.