நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. அதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் மாநில வாரியாக பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்களான பொருளாதார மேதை சஞ்சீவ் சன்யால், நிதி ஆயோக் துணை இயக்குனர் ஆகன்க்ஷா அரோரா ஆகியோர் அடங்கிய குழு ஆய்வுமேற்கொண்டு இந்த மாதம் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அளித்துள்ள அந்த அறிக்கையில், 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோல், தனிநபர் வருமானத்திலும் தென்மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 3-வது இடத்தில் தமிழகம் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகம் 8.9 சதவீதத்துடன் இந்த இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் 13.3 சதவீதத்துடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா 9.7 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.
1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொருளாதார தாராள மயமாக்கல் கொள்கைக்கு பின்னர் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களும் சராசரி வளர்ச்சியை எட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதேவேளையில், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் பின்னடைவை சந்தித்துள்ளன. கடந்த 1961-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 10.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி தற்போது 5.6 சதவீதமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் தென் மாநிலங்கள், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள், மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன.
இதேபோல், தனிநபர் வருமானத்தில் டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மிக அதிகமாக உள்ளதாகவும் பீகாரில் மிகக் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டு நிலவரப்படி, டெல்லியின் தனிநபர் வருமானம் 250.8 சதவீதமாக இருக்கிறது. இது நாட்டின் சராசரி வருமானத்தை விட 2.5 மடங்கு அதிகமாகும். இதேபோல் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் பொருளாதார தாராள மயமாக்கல் கொள்கைக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கர்நாடகாவின் பங்கு 2000-01ல் 6.2 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24ல் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது