இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும் நமக்கு வரும் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு செல்வதாக நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாபெரும் புகழரங்கம் நடைபெற்றது. நகரச் செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திரைப்பட இயக்குனர் முத்துராமன், நடிகர் நாசர், மேயர் பிரியா, எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் நாசர் தமிழ் சினிமா துறைக்கு கலைஞர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரது தந்தை வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் செயல்படுத்தி வருகிறார். தமிழ் சினிமா துறையை மீட்டெடுக்க ஸ்ரீபெரும்புதூர் அருகே 140 ஏக்கர் நிலம் கொடுத்து, அதில் ஆங்கில ஐரோப்பிய சினிமா துறைக்கு ஈடாக ஸ்டூடியோ அமையவுள்ளது. இதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர் நான் அரசியல் பேச வரவில்லை.
தமிழ்நாட்டிற்கு பல்வேறு இன்னல்கள் திட்டமிட்டு வருகிறது. தமிழகம் அதிகமாக வரி செலுத்தும் மாநிலமாக உள்ளது. நாம் செலுத்தும் வரி நமக்கு வராமல் தடுத்து நிறுத்தப்பட்டு, வேறு மாநிலத்திற்கு செல்கிறது. நமக்கு வரும் திட்டம் தடுத்து நிறுத்தப்படுகிறது என்றார். அண்மையில் முதல்வர் நமது உரிமைகளை மீட்டெடுக்கும் கூட்டம் நடத்தினார். அது ஒன்றிய அரசிற்கு எதிரான கூட்டம் அல்ல நமது மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் கூட்டம் என்று பேசியுள்ளார்.
அமித்ஷா வீட்டில் நடந்தது என்ன? என்ன பேசினார் எடப்பாடி பழனிசாமி? புதிய தகவல்களுடன் எஸ்.பி.லட்சுமணன்!