மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் பணி நிமித்தமாக அங்கு செல்லவில்லை என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, குற்றவாளிகளை பிடிக்கச்சென்றபோது இருவரும் உயிரிழந்ததாகவும், அரசின் அலட்சியத்தால் அவர்கள் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு, ஆவடி காவல் ஆணையர் சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 04.11.2024 அன்று காலை சுமார் 2 மணியளவில் உதவி ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகியோர் நித்யாவின் இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் பத்மாவதி திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த காரை ஓட்டிவந்த மதன்குமார், குன்னக்குப்பம் கிராமம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம், என்பவர் மோதியதில் உதவி ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த காவலர் நித்யா என்பவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
காவலர் நித்யா என்பவர் கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை தற்செயல் விடுப்பில் இருந்து வருகிறார். உதவி ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ மதுரையைச் சேர்ந்தவர். நித்யா திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள்.ஜெய்ஸ்ரீ அண்மை காலத்தில் இருசக்கர வாகனத்தில் லடாக் சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் காவல் அலுவல் நிமித்தமாக செல்லவில்லை என்று தெரியபடுத்தப்படுகிறது.