203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நான்காக உயர்ந்துள்ளது. எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 6 ஆக இருந்தது. இன்று காலை மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், சித்தாமூரில் ஏற்கனவே மூவர் இறந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். எக்கியார்குப்பம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், முழுக்க முழுக்க தொழிற்சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்படும் எரிசாராயத்தில் தண்ணீர் கலந்து தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. சித்தாமூரில் உயிரிழந்தவர்கள் குடித்ததும் அதே வகையான கள்ளச்சாராயம் தான் என்றும், இரு இடங்களிலும் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் ஒரே இடத்திலிருந்து வாங்கி வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாரய வியாபாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, புதுச்சேரி- காரைக்கால் எல்லையில் மதுவிலக்கு போலீஸ் நடத்திய சோதனையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 5,901 லிட்டர் கள்ளச்சாராயம், 1,106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 203 பேரில் 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுகம், முத்து, ரவி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.