தமிழக அமைச்சரவையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அதேபோல் அமைச்சரவையில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்டு, 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தமிழ்நாடு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச்செயலரும், நீா் வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2வது இடத்தில் உள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது. திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு 4-வது இடத்தில் உள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர்களும், அமைச்சர்களுமான ஐ.பெரியசாமி 5-வது இடத்திலும், பொன்முடி 6-வது இடத்திலும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அமைச்சர்கள் எ.வ.வேலு 7-வது இடத்திலும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 8வது இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர்.
புதிதாக அமைச்சர்களாக பொறுபேற்றவர்களில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு அமைச்சரவையில் 19வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 21-வது இடமும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. சழியனுக்கு 27வது இடமும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33-வது இடமும் வழங்கப்பட்டு உள்ளது.