கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பேரண்டபள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்ற வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் ஊர்ந்தபடி நகர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி ஒன்று வேகமாக முன்னாள் சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 கார்கள், ஒரு அரசு பேருந்து, 4 லாரிகள் அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர் .