கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார், ஐஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து விசாரணையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 107 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 39 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளவும், மேல்நடவடிக்கை எடுக்கவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு தலைமையில் சிபிசிஐடி அதிகாரி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி,சிபிசிஐடி கண்காணிப்பாளர் வினோத் சாந்தா ராம், திருச்சி டி.சி.பி விவேகந்தா சுக்கலா, டி.ஐ.ஜி திஷா மித்தல், வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஆகியோர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தற்போது வரை விஷச் சாராயம் விற்ற கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா அவரது தம்பி தாமோதரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு தலைமையில் ஒரு டி.எஸ்.பி, ஒரு ஏ.டி.எஸ்.பி, ஒரு எஸ்.பி., நான்கு இன்ஸ்பெக்டர்கள் என 5 குழுக்கள் அமைத்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.