தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்
திருக்கோவிலூரில் தந்தை உயிரிழந்த நிலையில் தேர்வு எழுத சென்ற பத்தாம் வகுப்பு மாணவி 428 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்- பெயிண்டர், பாப்பாத்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், திலகா என்ற ஒரு மகளும் உள்ளனர். திலகா அதே பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், முருகதாஸ், உடல்நலம் குன்றி கடந்த ஏப்ரல் மாதம்10ஆம் தேதி என்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் திலகா, தனது தந்தையின் சடலம் வீட்டில் இருக்கும் பொழுதே அன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வும், அதன் தொடர்ச்சியாக மற்ற தேர்வுகளும் எழுதி இருந்தார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 428 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். தந்தை உயிரிழந்த சோகத்திலும் மகள் தொடர்ச்சியாக தேர்வு எழுதி 428 மதிப்பெண் பெற்றது அப்பகுதி மக்களிடையே வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் 428 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த பள்ளி மாணவி திலகா கூறும்போது, ‘எனது தந்தை என்னை எப்போதுமே நன்றாக படிக்க வேண்டும், அரசு துறைக்கு வேலைக்கு போக வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை என என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லி வந்தார். அவரது கனவை நிறைவேற்றுவேன்’ என்றார்.