
தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று (மே 03) காலமானார். சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
திரைத்துறையில் நடிகர் மனோபாலா கடந்து வந்த பாதை!
அந்த வகையில் நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எங்கள் அப்பா பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அண்ணன் மனோபாலா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.