
தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று (மே 03) காலமானார். சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்த தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது, மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.