அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம் கட்ட மெட்ரோ விரிவாக்கத்திற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு வஞசிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியுள்ளாா்.
அகமதாபாத் நகரில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.1,067 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கிஃப்ட் நகரில் இருந்து ஷாபூர் வரை 3.3 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாதை மற்றும் நிலையங்கள் அமைக்கும் பணிக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம் பயணிகள் சேவை தொடங்கிய நிலையில், சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே விரிவாக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ரூ.63,246 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்தை 50:50 நிதி பங்கீட்டில் செயல்படுத்த 2024 அக்டோபரில் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றிய அரசு ரூ.30,000 கோடிக்கும் மேல் நிதி வழங்க வேண்டும்.
ஆனால் இதுவரை ரூ.10,354 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிதி வழங்கப்படாததால் மாநில அரசின் சொந்த நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் பங்கான ரூ.9,500 கோடியை மாநில அரசு தனது சொந்த நிதியில் விடுவித்துள்ளதாகவும், இதுவே மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடன் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். “50:50 என்ற அடிப்படையில் கிடைக்க வேண்டிய பலன்கள் முழுமையாக கிடைக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலுவையில் உள்ள திட்டங்களான சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்திற்கும், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான விரிவாக்கத்திற்கும் ஒன்றிய அரசின் ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளாா்.
”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்


