செங்கல்பட்டு மாவட்டம் மீஞ்சூர் அருகே முன்னால் சென்ற லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(63). இவர் 1991-96ம் ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவர்களது மகள் ரவீனா சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில், தனது மகள் ரவீனாவை சென்னையில் உள்ள கல்லூரியில் விட்டுவிட்டு இருவரும் காரில் ஊருக்கு திரும்பியுள்ளனர். மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சீமாவரம் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது ரவிக்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மனைவி நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.