ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது விசாரணை நடத்த முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு வழக்கறிஞர் வைக்காமல் வழக்கின் விசாரணையை கால தாமதப்படுத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரனை சிறை மாற்றம் செய்வது தொடர்பாக அடுத்த விசாரணையில் பதிலளிக்கப்படும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்படுபவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுக்கள் மீது தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.