சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது
நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் இருந்து இந்தாண்டும் பாதியிலேயே வெளியேறினார். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து கிளம்பினார். இதனிடையே சட்டப்பேரவையில் தான் உரையாற்றியது தனது x வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் குழு சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் வழங்கினார் அந்ந கடிதத்தில், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம். விதி எண். 220ன் படி நேற்று (12.02.2024) ஆளுநர் உரையின் போது சட்டப்பேரவையில் ஆளுநரின் பேச்சு குறித்து அவை நீக்கப்பட்ட சில பகுதிகளை உள்நோக்கத்தோடு சமூக X தளத்தில் வெளியிட்ட ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அவை உரிமை மீறல் தீர்மானத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.