தமிழ்நாட்டிற்குரிய 151 உயர் சிறப்பு அரசு மருத்துவ இடங்களை இழந்துள்ள விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக (TVK) அரசின் அலட்சியப் போக்கினாலேயே இந்த இழப்பு நேரிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அரசிற்குப் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
“27% இடஒதுக்கீடு பெற்ற நாளில் ஒரு பின்னடைவு”
தனது அறிக்கையில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்ப இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 27% இடஒதுக்கீட்டைத் திமுக போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை இழக்கும் வேதனைக்குரிய செய்தி வந்திருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய 151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை நாம் இழந்திருக்கிறோம். இது லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர் சார்ந்த பிரச்சினை. இதில் தவெக அரசு, நமது அரசு மருத்துவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உரிய விளக்கத்தை அளித்தாக வேண்டும்.”

தவெக அரசுக்குச் சரமாரி கேள்விகள்
நீதிமன்ற விசாரணையின் போது அரசு நடந்துகொண்ட விதத்தைச் சுட்டிக்காட்டி அவர் எழுப்பியுள்ள முக்கிய வினாக்கள்,
- வழக்கறிஞர்கள் ஆஜராகாதது ஏன்?: உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
- தொடர் அலட்சியம் ஏன்?: மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் ஆரம்பம் முதலே அரசு அலட்சியமாகச் செயல்பட்டது ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் இந்தத் தாமதம்?
- வலுவான வாதம் இன்றி ‘சரண்டர்’: நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்தவொரு வலுவான வாதத்தையும் முன்வைக்காமல் அரசு ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன?
- திட்டமிட்ட செயலா?: அகில இந்தியக் கலந்தாய்வின் (AIQ) 2-ம் சுற்று நடைபெறுவதற்கு முன்பே, மாநிலக் கலந்தாய்வை அவசர அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்தது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா?
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு காட்டிய அலட்சியமே இந்த மாபெரும் இழப்பிற்கு காரணம் என்றும், இதற்குப் பொறுப்பேற்று அரசு உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
