குடியுரிமை திருத்த சட்டம், வக்பு சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் அபிஷேக் மனு சிங்வி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசியதாவது:- சுதந்திரத்தின் போது காங்கிரஸில் பல்வேறு சட்ட நிபுணர்கள் இருந்தார்கள். ஜவஹர்லால் நேரு, காந்தி, பட்டேல், ராஜாஜி உள்ளிட்ட பல சட்ட நிபுணர்கள் இருந்தாலும், அவர்களை எல்லாம் அரசியல் சாசனக் குழுவிற்கு தலைவராக நியமிக்காமல், அண்ணல் அம்பேத்கரை தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் என்றால் காரணம் இல்லாமல் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அன்று அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமான ஒரு உறுப்பினர் கூட அல்ல. அண்ணல் அம்பேத்கரை தேர்ந்தெடுத்ததால் தான் அரசியல் சாசனம் வந்தது என்று பெருமைப்படுகிறேன். ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித் மக்கள் அகியோருக்கு உரிமைகள் கிடைத்தன. குறிப்பாக பெண்களுக்கு வாக்குரிமை சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்கு பின்பு தான் அமெரிக்காவில் கிடைத்தது. ஆனால் குடியரசு ஆன முதல் நாளிலேயே அனைத்து மக்களுக்கும் உரிமையை அரசியல் சாசனத்தில் எழுதியது அண்ணல் அம்பேத்கர் தான்.
அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமே கூட்டாட்சி தத்துவம்தான். தேர்தலுக்கு முன்னால் 400 இடங்களை பெற போவதாக பாஜக சபதம் எடுத்தது. ஆனால் 400 இடங்களை மக்கள் பாஜகவுக்கு கொடுத்திருந்தால் அரசியல் சாசனத்தை தகர்த்து எறிந்து இருப்பார்கள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் வைத்து வீடுகள் இடிக்கிறார்களோ, அதுபோல அரசியல் சாசனத்தை சுக்கு நூறாக உடைத்து, புதிய குடியரசு நிறுவி, அரசியல் சாசனத்தை கொண்டு வந்திருப்பார்கள் என்பதில் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கூட தரவில்லை. அருதி பெரும்பான்மை கூட தரவில்லை. 240 தொகுதிகளோடு நிறுத்தி விட்டார்கள். இதனால் அரசியல் சாசனத்தை காப்பாற்றிவிட்டோம் என மக்கள் நினைக்கலாம். ஆனால் மோடி தலைமையில் உள்ள அரசு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி அவர்கள் வேறு திட்டத்தை வரையறுக்கிறார்கள்.
புல்டோசரை கொண்டு தானே தகர்க்க முடியாது. சுத்தியல், உளியை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கலாம் என்று கடந்த ஓராண்டாக பல சட்டங்களை கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தை சிதைக்கின்றார்கள். குடியுரிமை திருத்தச்சட்டம், வக்பு திருத்தச் சட்டம் ஆகியவை உளி வைத்து அரசு சாசனத்தை சிதைப்பது தான். தனி மனித உரிமைகளை சிதைப்பது, கல்வி உரிமையை சிதைப்பது இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கலாம். அரசியல் சாசனத்தை சிதைக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை தவிர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நின்று நிதானித்து சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அவற்றை எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.