சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி வெளியிட வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது!!
தமிழ்நாடு, புதுச்சேரி கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்களை வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றின் மூலம் வழங்கி வரும் நிலையில் உரிய அனுமதி பெற்ற பிறகே விளம்பரங்களை வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சிகள் உரிய முன் அனுமதி இல்லாமல் அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் மற்றும் பிற பயன்பாடுகள் மூலம் அரசியல் சார்ந்த விளம்பரங்களை வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊடகங்களிடம் பணம் கொடுத்து செய்திகள் வெளியிட வைத்தால் கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதேபோல் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கலின் போது வழங்கும் பிரமாணம் பத்திரத்தில் வேட்பாளர்கள் அவர்களுக்கென உள்ள அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்க விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், வேட்பாளர்கள் விளம்பரத்திற்காக செலவு செய்த தொகையை தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
