அன்பு ஜோதி இல்லம் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது, அனுமதி இல்லாமல் செயல்பட்டது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை, குரங்குகளை ஏவி கடிக்க வைத்தல்,வியாபார நோக்கத்துடன் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நிர்வாகி அன்பு ஜீபின் மற்றும் அவரது மனைவி மரியா ஜீபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 6 என மொத்தம் 8 பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட நிலையில், குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமம் மற்றும் கோட்டகுப்பம் பகுதியில் செயல்பட்டு இதன் கிளை ஆசிரமமும் சீல் வைக்கப்பட்ட நிலையில் 170 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், பிற ஆசிரமத்திலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் அடுத்த டொட்டகுப்பி பகுதியில் உள்ள Home of Hope என்ற காப்பகத்தில் செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு பிறகு காணாமல் போன 16 பேர் குறித்து நிலை தெரியவரும், இதனிடையே விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான நான்கு வழக்குகள் CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆசிரமத்தில் இருந்தவர்கள் உடலுறப்புக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது, ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களின் மரணம் தொடர்பாக முறையான ஆவணங்கள் இல்லை. 3 மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் அன்புஜோதி ஆசிரமம் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
