பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை மருத்துவமனையில் சந்தித்தவர்கள், நலம் வேண்டியவர்கள் மீதான அன்புமணியின் விமர்சனம் எல்லை மீறியது என்று பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- பாமகவிலிருந்து சென்ற மாதம் நீக்கப்பட்ட மருத்துவர் அன்புமணி தன்னை ஆதரிப்பவர்கள் மத்தியில் நேற்று (10.10.2025) ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பல செய்திகளை அவரது ஆதரவாளர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி எல்லாம் நமக்கு பெரிய விமர்சனம் ஏதுமில்லை.
ஆனால் அண்மையில் மருத்துவர் ராமதாஸ் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்தபோது பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஓரிரு பாமகவினரை தவிர மீதி அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்து சென்றார்கள். வர இயலாதவர்கள் தொலைபேசி மூலமும், அறிக்கைகள் வழியாகவும் ராமதாஸ் நலம் பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரியப்படுத்தினார்கள்.
இது குறித்து 10.10.2025 அன்று நடந்த அக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி பேசும் போது மருத்துவர் ராமதாசை வைத்து ( எக்சிபிஷன்) கண்காட்சி நடத்துகிறார்கள் என்றும் மேலும் அய்யாவுக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன தியாகவும் ஏதாவது தொந்தரவு ஏற்படுமென்றால் அது மரு.அன்புமணி அவர்களால் மட்டுமே ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே, மருத்துவர் அய்யா அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொந்தரவுகளையும், அவமரியாதைகளையும் கொடுத்தது உலகமறிந்த ஒன்று. தற்போது மருத்துவர் அன்புமணியின் பேச்சு அய்யா அவர்களின் மனதை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வர் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மருத்துவர் ராமதாஸ் மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை அறிந்து அவர்களாகவே வந்து சந்தித்து நலம் பெற விசாரித்து சென்றிருக்கிறார்கள். யாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வரவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் ராமதாஸ் அவர்கள் மீது கொண்ட அக்கறை, மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே நலம் விசாரித்து சென்றனர்.
மருத்துவர் அன்புமணி மருத்துவமனைக்கு வந்த தலைவர்களை கண்காட்சி காண வந்தவர்கள் என்று பேசி இருப்பது உண்மையிலேயே அந்த தலைவர்களை அவமதிப்பது போன்றதாகும். அதையும் தாண்டி தொலைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுப்பது தரம் தாழ்ந்த சொல்லாகும். நீங்கள் வரவில்லை. பார்க்கவில்லை. என்பதெல்லாம் உங்களுடைய தனிப்பட்ட விஷயம்.
ஆனால் மருத்துவர் ராமதாஸ் அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க வந்த தலைவர்களை பழித்து பேசுவது, கண்காட்சி பார்க்க வந்தவர்கள் என்று பேசுவது மிகவும் கீழ்த்தரமான, நாகரீகமற்ற விமர்சனமாக இருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தனது பெயரை கூட போட்டுக் கொள்ளக் கூடாது என்று பகிரங்கமாக அறிவித்துவிட்ட சூழலில் மருத்துவர் அன்புமணி, மருத்துவர் ராமதாஸ் அவர்களை மருத்துவமனையில் சந்தித்தவர்கள், நலம் வேண்டியவர்கள் மீதான விமர்சனம் எல்லை மீறியதும், பிற தலைவர்கள் ராமதாஸ் மீது கொண்டுள்ள அக்கறை, மரியாதையை கேள்விக்கு உள்ளாக்கி அதனை சிதைக்கும் நோக்கம் கொண்டதாகும்.
இதனை பாமக மற்றும் மருத்துவர் ராமதாஸ் சார்பிலும் வன்மையாக கண்டிப்பதோடு, இனி இவ்வாறான மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் மருத்துவர் அன்புமணியை கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.