வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் கடந்த நவ. 26ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல மெல்ல நகர்ந்து , இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் , மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு 510 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கிறது. இந்த வங்கக்கடலில் தற்போது மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி நாளை ( நவம்பர் 3ம் தேதி ) உருவாகும் இந்த மிக்ஜம் புயலானது, நாளை மறுநாள் ( நவ.4 தேதி) சென்னைக்கு மிக அருகே வரவுள்ளது. தொடர்ந்து 5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது. புயல் நெருங்கும்போது, தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நாளை (நவ.3) கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கி. மீ வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை மறுநாள் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50 – 70 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சுமார் 80 கி.மீ முதல் 100 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.