அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டமா? அமைச்சர் பதில்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2வது கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் கீதா ஜீவன் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “பள்ளி குழந்தைகளுக்கு காலையில் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கிறது, காலை உணவு திட்டத்தினால் மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கிறது மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பெற்றோர்களின் பணிச்சுமை குறைந்துள்ளது. நல்ல எதிர்காலம் சமுதாயம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 589 பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த காலை உணவு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்றார்