பொங்கல் திருநாளை அவமதிக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தெரிவித்துள்ளார்.
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் இயக்கும் தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ள “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கானத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது முற்றிலும் தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க. அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) தேர்வு கூட பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டதாகவும், பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள சி.வி.எம்.பி.எழிலரசன், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழர்களின் ஒற்றுமைக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாக விளங்கும் பெருவிழா பொங்கல். “நாம் காணும் பொங்கல் விழா, உலகெங்கிலும் பிறந்து மொழி பயின்று வாழும் மனித குலத்துக்கே பொதுவான விழா! ஆம்! பசிக்கின்ற நல் வயிறு படைத்துள்ள மனித இனம் முழுவதுக்கும் சொந்தமான உலகப்பெருவிழா!” என்று முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்படும் உலகப் பெருவிழாவினை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக அவமரியாதை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சி.வி.எம்.பி.எழிலரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அறிவிக்கப்பட்ட “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் திராவிட மாடல் முதல்வர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆலோசனைகளைப் பெற்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் சி.வி.எம்.பி.எழிலரசன் தெரிவித்துள்ளார்.